

சென்னை: பூங்காவுக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில காவலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு வழக்கமாக வருகை தரும் 13 வயது சிறுமியிடம், கோவிந்தா சார்கி (28) என்ற காவலாளி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பூங்காவுக்கு வந்த அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் கடந்த 2023-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து கோவிந்தா சார்கியை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அப்போது போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ். அனிதா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட காவலாளி கோவிந்தா சார்கிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.