வாஹித்தூர் ரகுமான்
 வாஹித்தூர் ரகுமான்

கோவையில் கைதான நபரை டெல்லிக்கு அழைத்துச் சென்று விசாரணை!

Published on

கோவை: மேட்டுப்பாளையத்தில் நேற்று கைது செய்யப்பட்ட நபரை டெல்லி அழைத்து சென்று அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொள்கின்றனர். இவர் ஏற்கெனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலை (விரிவாக்கம் வீதி) பகுதியை சேர்ந்தவர் வாகித்தூர் ரகுமான் (35). இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். எட்டு மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்து செல்லப்பட்டார். அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியது: “வாஹித்தூர் ரகுமான் திருமணம் ஆகாதவர். தந்தை பெயர் ஜெயினுலாபுதீன். மேட்டுப்பாளையம் எல்.ஐ.சி நகரில் தந்தையுடன் இணைந்து இரும்பு கடை நடத்தி வருகிறார்.

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மேட்டுப்பாளையம் நகர ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகித்தார். கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு ‘பிஎஃப்ஐ’ அமைப்பை தடை செய்த போது, மேட்டுப்பாளையம் பாரதி நகர் அருகே உள்ள அம்பி பிளைவுட், நவீன் பிளைவுட், கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய குற்ற வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒரு ஆண்டு சிறையில் இருந்தார். சட்டவிரோத பண பரிமாற்றம் செய்துள்ளதற்காக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in