உத்தர பிரதேசத்தில் கப்பல் அதிகாரி கொலை: உடலை மறைத்த மனைவி, காதலன் கைது

உத்தர பிரதேசத்தில் கப்பல் அதிகாரி கொலை: உடலை மறைத்த மனைவி, காதலன் கைது
Updated on
1 min read

மீரட்: உ.பி.யின் மீரட் நகரில் லண்டனில் இருந்து திரும்பிய கப்பல் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி மறைத்து வைத்த அவரது மனைவி மற்றும் அவரது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மீரட் நகரின் பிரம்மபுரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு அருகில் வசிப்பவர்கள் நேற்று முன்தினம் தகவல் அளித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்ததில் சிமென்ட் நிரப்பிய ட்ரம் ஒன்றில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து கொல்லப்பட்டவர் அந்த வீட்டில் வசித்த சவுரவ் ராஜ்புத் (35) என அடையாளம் கண்டனர். மேலும் அவரை அவரது மனைவி மஸ்கன் ரஸ்தோகி, அவரது காதலன் சாகில் சுக்லா என்கிற மோகித் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்ததை விசாரணையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து கொலை மற்றும் தடயங்களை மறைத்ததாக இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து மீரட் நகர காவல் கண்காணிப்பாளர் ஆயுஷ் விக்ரம் சிங் நேற்று கூறியதாவது: கொல்லப்பட்ட சவுரவ் ராஜ்புத், வணிக கப்பல் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி மஸ்கன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக லண்டனில் இருந்து மீரட் திரும்பியுள்ளார். மீரட் திரும்பிய அடுத்த சில நாட்களில் அதாவது கடந்த மார்ச் 4-ம் தேதி மஸ்கன், அவரது காதலன் மோகித் ஆகியோரால் சவுரவ் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சவுரவ் - மஸ்கன் ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2016-ல் இவர்கள் திருமணம் நடந்ததுள்ளது. இவர்களுக்கு 6 வயதில் மகள் இருக்கிறார்.

மீரட் திரும்பிய சவுரவ் குறித்து அவரது குடும்பத்தினர் மஸ்கனிடம் விசாரித்து வந்துள்ளனர். என்றாலும் சவுரவ் உயிருடன் இருப்பது போல் மஸ்கன் நடித்து வந்துள்ளார். சந்தேகத்தை தவிர்க்க சவுரவ் போனில் இருந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in