கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை: போலீஸ் விசாரணை

கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை: போலீஸ் விசாரணை
Updated on
1 min read

கோவை: கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் தங்கள் காவல் எல்லைக்குட்பட்ட வஉசி பூங்கா பகுதியில் நேற்று நள்ளிரவு வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது நள்ளிரவு 1.30 மணியளவில் பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் இருந்த மரத்தில் ஒரு ஆண் சடலம் இருந்தது. ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ரோந்து போலீஸார் ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்டவர் யார் என விசாரித்தனர். அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர் கோவை அடுத்த கோவைப்புதுரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (54) சிறப்பு உதவி ஆய்வாளர் எனத் தெரிய வந்தது. இவர் தற்பொழுது கோவை தீவிரவாத பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு மனைவி இரண்டு மகள்கள் இருந்தனர். மகள்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். இவர் 2-ம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளராக படிப்படியாக முன்னேறியுள்ளார். நேற்று காரமடையில் உள்ள நண்பர் ஒருவரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்துள்ளார். அதன் பின்னர் நேற்று இரவு வெளியே சென்று விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. குடும்பச் சூழலில் எந்த அழுத்தமும் இல்லை, பணியில் எந்த அழுத்தமும் இல்லை எனத்தெரிவித்த காவல்துறையினர் இவர் தற்கொலைக்கு என்ன காரணம் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in