2023 உடன் ஒப்பிடுகையில் 2024-ல் தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்ததாக டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

டிஜிபி சங்கர் ஜிவால் | கோப்புப்படம்
டிஜிபி சங்கர் ஜிவால் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாகவும், ரவுடிகளின் அட்டூழியம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் இன்று (மார்ச் 6) வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் துறை பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால், தமிழகத்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்த வகையில் 2023-ல் ஆதாயக் கொலைகள் 83 ஆக இருந்த நிலையில், 2024-ல் இது 75 ஆக (10 சதவீதம்) குறைந்துள்ளது.

இதேபோல், 2023-ல் 133 ஆக இருந்த கூட்டுக் கொள்ளை , 2024-ல் 110 ஆக குறைந்துள்ளது, அதாவது 17 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் திருட்டு வழக்குகள் 10.65 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2023-ல் 17,788 ஆக இருந்த திருட்டு, 2024-ல் 15,892 ஆக குறைந்துள்ளது.இதுமட்டும் அல்லாமல் 2023-ல் கொலை, கொலை முயற்சி, கொலையாகாத மரணம் உள்ளிட்ட வகைகளில் 49,286 வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த வழக்குகள் 2024-ல் 31,497 ஆக குறைந்திருந்தது. இதனால், 2023-ஐ ஒப்பிடுகையில் 2024-ல் 17,789 வழக்குகள் (36.12 சதவீதம்) குறைந்துள்ளன.

இதேபோல் 2023-ல் 110 ஆக இருந்த கொலை வழக்குகள் 2024-ல் 63 வழக்காக குறைந்தது. இது 2023-ஐ ஒப்பிடும்போது 2024-ல் 47 வழக்குகள் அதாவது 47.72 சதவீதம் குறைவாகும். இதேபோல் 2023-ல் 3694, 2024-ல் 4572 சமூக விரோதிகள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கலவர வழக்குகளும் 5.8 சதவீதம் (2023-ல் 1,305, 2024-ல் 1,229) குறைந்துள்ளது.

தமிழக காவல் துறையின் முன்னெச்சரிக்கை மற்றும் ரவுடிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை காரணமாக 2024-ம் ஆண்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. குறிப்பாக கொலை மற்றும் ஆதாயக் கொலைகள் குறைந்துள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in