சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு நீதிமன்றம்

சீமான் வீட்டு பணியாளர், பாதுகாவலர் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது செங்கல்பட்டு நீதிமன்றம்
Updated on
1 min read

செங்கல்பட்டு: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுப் பணியாளர் மற்றும் பாதுகாவலரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்துக்குச் சென்ற போலீஸார், சம்மனை ஒட்டிச் சென்றனர். இதனிடையே, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவருக்கும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, ஒரு வழக்கில் மட்டும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஏற்கெனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in