டிஜிட்டல் அரஸ்ட்டில் 18 நாள் சிக்கிய பேராசிரியர்: ரூ.47 லட்சம் அபகரிப்பு

டிஜிட்டல் அரஸ்ட்டில் 18 நாள் சிக்கிய பேராசிரியர்: ரூ.47 லட்சம் அபகரிப்பு
Updated on
1 min read

டேராடூன்: டிஜிட்டல் அரஸ்ட் என்று கூறி 18 நாள் நைனிடாலைச் சேர்ந்த பேராசிரியரை மர்ம கும்பல் சிறை வைத்திருந்தது. மேலும், அவரிடமிருந்து ரூ.47 லட்சத்தையும் அந்தக் கும்பல் சுருட்டியுள்ளது. இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக உத்தராகண்ட் மாநில போலீஸ் அதிகாரி அருண்குமார் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் (பெயர் விவரம் வெளியிடப்படவில்லை) ஒருவர் இங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ஆகும்.

இவரை கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம கும்பல், தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று கூறி மிரட்டியுள்ளனர். பின்னர் அவரை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் என்று கூறி அந்தக் கும்பல் மிரட்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து பேராசிரியர், பல்கலைக்கழகம் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அவர்களது அனுமதியை பெற்றே ஆக வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

மேலும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47 லட்சத்தையும் அவர்கள் சுருட்டியுள்ளனர். சுமார் 18 நாட்கள் அவரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்திருந்துள்ளனர். இதுதொடர்பாக அவர் கடந்த வாரம் கொடுத்த புகாரின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி அங்குஷ் மிஸ்ரா கூறும்போது, “ஒருவரை 18 நாட்கள் டிஜிட்டல் கைது வைத்திருந்தது இதுவே முதல்முறையாகும். கைது செய்யப்பட்ட அமன் குஷ்வாஹா என்பவர்தான் இவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம். டிசம்பர் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை அவரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்து மிரட்டியுள்ளனர்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in