

சென்னை: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தனியார் விடுதியில் இலங்கை நாட்டினர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக மங்களூரு போலீஸாருக்கு கடந்த 2021-ம் ஆண்டு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விடுதிக்குச் சென்ற மங்களூரு போலீஸார் அங்கிருந்த 32 இலங்கை நாட்டினரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர்கள், கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு கும்பல் கள்ளப்படகு மூலம் 2 கட்டமாக இலங்கையில் இருந்து ராமநாதபுரத்துக்கும், தூத்துக்குடிக்கும் அழைத்து வந்து, அங்கிருந்து ரயில், பேருந்து மூலம் மங்களூரு அழைத்து வந்ததாகவும், இங்கிருந்து அவர்கள் தங்களை கனடாவுக்கு அனுப்பி வைக்க உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இதற்காக, லட்சக்கணக்கில் அந்த கும்பல் பணம் பெற்றதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கர்நாடக காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, இந்த விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது.
இதில் 10 பேருக்கு இதில் தொடர்பு இருந்த நிலையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் தேடி வந்த நிலையில், முக்கிய குற்றவாளியான முகமது இப்ராகிம், சென்னையில் தலைமறைவாக இருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை தீவிரவாத தடுப்பு பிரிவினருடன் இணைந்து 9-வது குற்றவாளியாக முகமது இப்ராகிமை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இம்ரான் ஹாஜ்யாரைத் தேடி வருகின்றனர்.