செவிலியர் மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான பெரம்பலூர் காவலர் சஸ்பெண்ட்!

செவிலியர் மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான பெரம்பலூர் காவலர் சஸ்பெண்ட்!
Updated on
1 min read

திருச்சி: செவிலியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைதான காவலரை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் எஸ்.பி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த பிருத்திகைவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஒரு குற்ற வழக்கில் பெரம்பலூர் மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரை மேல் சிகிச்சைக்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவருக்கு பெரம்பலூர் நகர போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் இளம்ராஜா (36) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

இந்நிலையில், கைதி வார்டுக்கு முதலாம் ஆண்டு பயிற்சி செவிலியர் மாணவி ஒருவர் அந்தக் கைதிக்கு சிகிச்சை அளிக்க வந்துள்ளார். அப்போது போலீஸ்காரர் இளம்ராஜா அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறினார்.

இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் இளம்ராஜா, மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தது உறுதியானது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இளம்ராஜாவை கைது செய்தனர். இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஸ் பசேரா 2-ம் நிலை போலீஸ்காரரான இளம்ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in