வழக்கறிஞர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
அரியலூர்: வழக்கறிஞர் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அரியலூர் உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(40). ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த இவருக்கும், அவரது உறவினர் சுப்பிரமணியனுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு குடிநீர் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, ஆத்திரமடைந்த சுப்பிரமணியன்(65), அவரது மனைவி நீலம்மாள்(55), மகன்கள் செந்தில்குமார்(39), செல்வம்(35), மணிகண்டன்(32) ஆகியோர் அறிவழகன் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியன் உட்பட 5 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி மலர்வாலாண்டினா, குற்றம் சுமத்தப்பட்ட சுப்பிரமணியன், நீலம்மாள், செந்தில்குமார், செல்வம், மணிகண்டன் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜரானார்.
