

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 22-ம் தேதி ஐஸ்அவுஸ், டாக்டர் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே ஆக்டிவா வகை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கண் இமைக்கும் நேரத்துக்குள் மாணவியின் செல்போனை பறித்து தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து, அவரது தந்தையிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதையடுத்து, மாணவி சார்பில் அவரது தந்தை ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அதன் அடிப்படையில் துப்பு துலக்கினர்.
இதில், மாணவியிடம் செல்போன் பறித்தது 16 வயது சிறுவன் என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீஸார், சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.