சென்னை | மாநகராட்சி ஊழியரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது
சென்னை: ஓடும் பேருந்தில் சென்னை மாநகராட்சி ஊழியரிடம் செல்போன் பறித்த ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கொளத்தூர் விநாயகபுரம் கணேஷ்நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(46).
இவர், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 21-ம் தேதி காலை, தங்கசாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாநகர பேருந்தில் ஏறி பணிக்கு சென்று கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது செல்போன் திருடப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், ஓடும் பேருந்தில் கார்த்திகேயனின் செல்போனை திருடியது ஆந்திர மாநிலம் பீமாவரம் பகுதியைச் சேர்ந்த மேகலா நானி என்ற நானி(23), அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த்(20), பிரபாஸ்(20) என்பது தெரிந்தது.
தலைமறைவாக இருந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர், 3 பேரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப் பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
