

கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.18 ஆயிரம் லஞ்சம் பெற்ற பழநி கோயில் தேவஸ்தான செயற்பொறியாளர் பிரேம்குமாரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பழநி தேவஸ்தானம் சார்பி, ஒட்டன்சத்திரத்தில் ரூ.71 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பாக்கி ரூ.21 லட்சத்தை வழங்கக் கோரி ஒப்பந்ததாரர் செந்தில்குமார், தேவஸ்தான கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் பிரேம்குமாரை(50) அணுகினார். இந்த தொகையை வழங்க ரூ.18 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு பிரேம்குமார் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இது தொடர்பாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸார் அறிவுரையின்படி, செந்தில்குமார் நேற்று ரசாயனம் தடவிய ரூ.18 ஆயிரம் பணத்தை பழநி தேவஸ்தான அலுவலகத்தில் செயற்பொறியாளர் பிரேம்குமாரிடம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், பிரேம்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.