Published : 19 Feb 2025 07:37 AM
Last Updated : 19 Feb 2025 07:37 AM
சென்னை: முன்விரோதம் காரணமாக நண்பரை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017 ஜன.27-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் மதார்ஷா தெருவில் சிலருடன் பேசிக்கொண்டிருந்த பெயின்டிங் தொழிலாளி ஜாகிர் உசேன் (25) படுகொலை செய்யப்பட்டார்.
முன்விரோதம் காரணமாக அவரது நண்பர்களான ஸ்ரீகாந்த்(24), ரத்தினராஜ்(22), முரளி(24), ரஞ்சித்(19) ஆகியோர் குடிபோதையில் அவரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து நண்டர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு விசாரணை சென்னை மாவட்ட 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.புவனேஸ்வரி முன்பாக நடந்து வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜி.சீனிவாசன் ஆஜராகி வாதிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதால், மற்ற 3 பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT