Published : 14 Feb 2025 12:22 AM
Last Updated : 14 Feb 2025 12:22 AM

மதுரை தோரணவாயில் இடிப்பின்போது பொக்லைன் ஓட்டுநர் உயிரிழந்தது எப்படி?

மதுரை மாட்டுத்தாவணியில் பொக்லைன் இயந்திரம் மீது விழுந்து கிடக்கும் தோரணவாயில். (உள்படம்) நாகலிங்கம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் இடிக்கப்பட்ட பழமையான தோரணவாயில் பொக்லைன் மீது விழுந்ததில் அதன் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாமல் முறையான கட்டிட ஆய்வு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இடித்ததாலேயே இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளதால் மாநகராட்சி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் 1981-ம் நடத்தபோது, மாநாட்டு நினைவாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் நுழைவுவாயில்ககளும், தமிழறிஞர்களுக்கு சிலைகளும் அமைக்கப்பட்டன. இதில் மாட்டுத்தாவணி பகுதியில் (தற்போதைய ஆம்னி பேருந்து நிலையம் முன்பு) அருகே நக்கீரர் தோரணவாயில் கட்டப்பட்டது. அப்பகுதியில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் உருவான வணிக நிறுவனங்கள், போக்குவரத்து பெருக்கம் போன்றவற்றால் சாலை விரிவாக்க பணிகளும் நடைபெற்றுள்ளன.

போக்குவரத்துக்கு இடையூறு: இதனால் நக்கீரர் தோரண வாயில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள நக்கீரர் தோரணவாயில் மற்றும் கே.கே.நகர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள தோரணவாயில் ஆகிய 2 தோரணவாயில்களையும் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரணவாயில் கட்டிடத்தை இடிக்கும் பணியானது நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் மாநகராட்சி சார்பில் தொடங்கியது. அப்போது போலீஸார் பாதுகாப்புடன் சிறிது நேரம் மாட்டுத்தாவணி சாலையில் போக்குவரத்து செல்லவும், பொதுமக்கள் நடமாடவும் தடை விதிக்கப்பட்டு, தோரணவாயிலை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்தனர். அப்போது தோரணவாயிலின் ஒருபுறம் உள்ள தூணை பொக்லைன் மூலம் இடித்தபோது, எதிர்பாராதவிதமாக தோரணவாயில் முழுவதுமாக சாய்ந்து பொக்லைன் இயந்திரம் மீது விழுந்தது.

இதில் பொக்லைன் ஆபரேட்டரான மதுரை மாவட்டம் உலகாணி அருகேயுள்ள பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பொக்லைன் இயந்திரத்தின் அருகே நின்று கொண்டிருந்த ஒப்பந்ததாரரான மதுரை சம்பக்குளத்தைச் சேர்ந்த நல்லதம்பிக்கு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்தபோது மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஒருவர்கூட அங்கு இல்லை என்பதும், மாநகராட்சி முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதும்தான் இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் யாரும் இந்த விபத்தில் சிக்காதது அதிர்ஷ்டமே என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

கான்கிரீட் தூண் இல்லை: மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘‘தோரணவாயில் தூண்கள் செங்கற்களாலும், மேலே உள்ள தோரணம் கான்க்ரீட் முறையிலும் கட்டப்பட்டிருந்தது. ஆனால், கான்க்ரீட் தூண்கள் என தவறாக கருதி இடித்துள்ளனர். செங்கல் மட்டுமே இருந்ததால், தூண்களை சிறிய அளவில் சேதப்படுத்தியதுமே, எதிர்பாராதவிதமாக திடீரென முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. விபத்து நடந்த பிறகுதான் தெரிய செங்கல் தூண் என தெரிந்தது.

பொதுவாக பழமையான கட்டிடங்களை இடிக்கும்போது, மாநகராட்சி பொதுப்பணித் துறையிடம் அந்த கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, மண் பரிசோதனையும் செய்ய வேண்டும். இதுபோன்ற பரிசோதனைகளுக்குப் பிறகே இந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் இவற்றில் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும், ஆய்வும் மேற்கொள்ளாமல் இரவோடு இரவாக இடித்து தள்ளி விடலாம் என்ற அலட்சியத்துடன் அணுகியதாலேயே இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது’’ என்றனர்.

பொக்லைன் ஓட்டுநர் நாகலிங்கத்தின் உடலை 2 மணி நேரத்துக்கு பின்னரே, கிரேன்கள் மூலமாக தோரணவாயில் இடிபாடுகளை அகற்றி மீட்டுள்ளனர். உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆளுங்கட்சியினர் பின்னணியில் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறியதின் அடிப்படையில் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர்.

மாநகராட்சி மீது வழக்குப்பதிவு: விபத்து குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘‘பணியின்போது அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் கோ.புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் கேட்டபோது, ‘‘கட்டிடத்தை இடிப்பதற்கு முறையான நடைமுறையைத்தான் பின்பற்றியுள்ளோம், அதிகாரிகளிடம் விசாரிக்கிறோம். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x