

விருதுநகர்: பழுதாகி நின்ற லாரி மீது பைக் மற்றும் சரக்கு வேன் அடுத்தடுத்து மோதியதில் பழ வியாபாரி, பட்டாசுத் தொழிலாளி உட்பட 3 பேர்உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒரு ஆலையிலிருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி நேற்று அதிகாலை மதுரை நோக்கிச் சென்றது. விருதுநகர் அருகே அக்ரஹாரப்பட்டி பாலத்தில் சென்றபோது, லாரி பழுதாகி திடீரென நின்றது.
அப்போது, லாரியின் பின்னால் வந்த பைக், அதைத் தொடர்ந்து வந்த சரக்கு வேன் ஆகியவை அடுத்தடுத்து லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பைக்கில் வந்த விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரத்தைச் சேர்ந்த பட்டாசு தொழிலாளி செல்வம் (36), அந்த பைக்கில் லிஃப்ட் கேட்டு வந்த இனாம் ரெட்டியபட்டி வினோத் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சரக்கு வேனின் முன்பக்கத்தில் அமர்ந்து சென்ற கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த பழ வியாபாரி வேல்முருகன் (43) என்பவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வேன் ஓட்டுநர் ரமேஷ் கார்த்திக் (28), விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக சிமென்ட் லாரி ஓட்டுநர் அரசபட்டி ஈஸ்வரன், சரக்கு வேன் ஓட்டுநர் கோவில்பட்டி ரமேஷ் கார்த்திக் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.