

விழுப்புரம்: திண்டிவனம் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டிவனத்தில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவிக்குப் புதுச்சேரி, ஜெயமூர்த்தி ராஜா நகர், ஜினியர் காலணியில் வசிக்கும் குமார் (48) என்பவர் வகுப்பு பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைப்பேசி மூலமாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் அம்மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 5-ம் தேதி இக்கல்லூரியில் பொருளாதாரத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் குமார் 17 வயது சிறுமியின் தொலைப்பேசிக்குத் தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி, புதுச்சேரிக்குப் போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும், அதற்குச் சிறுமி மறுத்துவிட்டதாகவும், மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் சிறுமியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது
இது குறித்து நடந்த சம்பவத்தைச் சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் அடிப்படையில் பேராசிரியர் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலடைத்தனர்.