

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி தமிழரசன் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலையத்தின் மீது கடந்த 2-ம் தேதி மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இது தொடர்பாக ஸ்ரீதரன் (28), டோனி மெக்கலின் (23) ஆகியோரை போலீஸார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதற்கிடையில், முக்கிய குற்றவாளியான தமிழரசன்(48) நேற்று கைது செய்யப்பட்டார்.
எலும்பு முறிந்தது... இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “முக்கிய குற்றவாளியான தமிழரசன் மீது கொலை, பணம் கேட்டு மிரட்டல், பெட்ரோல் குண்டு வீசுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீச்சு சம்பவத்தில் தனது மகன் ஹரி (18) என்பவரையும் ஈடுபடுத்தியுள்ளார். ஹரியை தனிப்படை போலீஸார் கடந்த 3-ம் தேதி சுட்டுப்பிடித்தனர். மேலும், விஷால் (20), பரத் (18) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ரவுடி தமிழரசன் சிப்காட் அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அவரை நேற்று தனிப்படை போலீஸார் விரட்டிச் சென்றபோது தடுக்கி விழுந்து, கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரைக் கைது செய்துள்ளோம். சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்றனர்.