

காரைக்குடி: காரைக்குடியில் காங்., பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடி முத்துப்பட்டினம் 3-வது வீதியைச் சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டி (54). இவர் காங்கிரஸ் வார்டு நிர்வாகியாக இருந்தார். அவர் நேற்று திடீரென மாயமானார். அவரது குடும்பத்தார், உறவினர்கள் தேடி வந்தனர். இன்று காரைக்குடி அதலைக்கண்மாய் அருகேயுள்ள விளைநிலத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.
அங்கு வந்த குன்றக்குடி போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சொத்து பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.