

செங்குன்றம்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (45). இவர் வண்டலூர் அருகே நடந்த கொலை வழக்கு தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாலாஜியின் உடல்நிலை, சிறையில் மேலும் மோசமானது என தெரிகிறது.
இந்நிலையில், பாலாஜியின் உடல் நிலை மிகவும் மோசமானதால், அவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த பாலாஜி இன்று (ஜன.22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.