

சென்னை: சமரசம் செய்ய லஞ்சம் பெற்ற பெண் எஸ்ஐ-க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் செல்வராஜன், கட்டுமான பணிக்காக திருவான்மியூரைச் சேர்ந்த அழகேசன் என்பவரிட மிருந்து மணல் வாங்கியுள்ளார்.
இதற்கான தொகையை வழங்குவதில் இருவருக்கு மிடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த 2013-ல் செல்வராஜன் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக செல்வ ராஜன் வேளச்சேரி போலீஸில் புகார் செய்தார். புகாரை விசாரித்த அப்போதைய வேளச்சேரி எஸ்ஐ கலைச்செல்வி, அழகேசனிடம் தகராறில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி புகாரை முடித்து வைத்துள்ளார்.
2 ஆயிரம் லஞ்சம்: பின்னர் செல்வராஜனை தொடர்பு கொண்டு பிரச் சினையை சுமூகமாக சமரசம் செய்துள்ளதால் தனக்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். இதுதொடர்பாக செல்வராஜன் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்யவே, லஞ்ச ஒழிப்பு போலீஸார் லஞ்சம் பெற்ற எஸ்ஐ கலைச்செல்வியை கையும், களவுமாகக் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ப்ரியா முன்பாக நடந்தது. அரசுதரப்பில் சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட எஸ்ஐ கலைச் செல்விக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இதன்காரணமாக தற்போது பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்ஐ கலைச்செல்வியை போலீஸார் கைது செய்து சிறைக்கு அழைத் துச் சென்றனர்.