

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வட மாநில இளைஞரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்(45), கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கோட்டை ஈஸ்வரி ஆற்றங்கரை பகுதியில் இயங்கி வரும் இறால் பண்ணையில் வேலை செய்த போது அங்கு வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலம் சோனைப்பூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் பிஜி (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கோட்டை ஈஸ்வரி கணவர் லட்சுமணனுக்கு தெரியாமல் சக்திகுமார் பிஜிக்கு வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவைகளை கடந்த சில மாதங்களாக கொடுத்த வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கோட்டை ஈஸ்வரி, சக்திகுமார் பிஜியுடன் சேர்ந்து தொண்டி பகுதியைச் சேர்ந்த பிரதீபன்(30), கவுதம் (34) ஆகிய இருவருக்கு பணம் கொடுத்து லட்சுமணனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
இது குறித்து தேவிபட்டினம் போலீஸார் மற்றும் தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, கோட்டை ஈஸ்வரி, பிரதீபன், கவுதம் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வடமாநில இளைஞரான சக்திகுமார் பிஜிவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.