

பெரம்பலூர்: முன்விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீஸார் சென்றபோது, அவர்களது முன்னிலையிலேயே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(32). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(30). இருவரும் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், அவர்களுக்கிடையேநேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கை.களத்தூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமைக் காவல் ஸ்ரீதர், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் இரு தரப்பினரிடையே சமாதானம் செய்ய முடிவு செய்து, மணிகண்டனை அழைத்துக் கொண்டு, கை.களத்தூர் காந்தி நகர் பகுதியில் உள்ள நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அருண் என்பவரின் வயலுக்குச் சென்றனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தேவேந்திரன், போலீஸாருடன் வந்த மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், தேவேந்திரனைப் பிடித்து கை.களத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்ட போலீஸார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மணிகண்டன் உடலை எடுத்துக் கொண்டு கை.களத்தூர் காவல் நிலையத்தின் முன் வைத்து, நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் காவல் நிலையம் மீது கல்வீசித் தாக்கினர். இதில் காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதையடுத்து காவல் நிலையம் பூட்டப்பட்டு, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி வருண்குமார், பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்டோர் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.