

சென்னை: புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காயமடைந்த மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திடீர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன்(33). ரவுடியான இவர் மீது கொலை முயற்சி உள்பட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி மாலதி(30). இவர் மீது கஞ்சா உள்பட 13 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு உலகநாதன் வீட்டில் இருந்தபோது, ஒரு கும்பல் வீட்டினுள் புகுந்து அவரை வெட்டி கொலை செய்தது. தடுக்க வந்த அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. மாலதி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதேபகுதியை சேர்ந்த தேசிங்கு என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டபோது, அவரது கொலையில் தொடர்புடையவர்களுக்கு உலகநாதன் அடைக்கலம் கொடுத்ததால், அவரை தேசிங்குவின் மகன் மற்றும் கூட்டாளிகள் வெட்டி கொலை செய்தது விசாரணை தெரியவந்தது. இதையடுத்து 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். தந்தை கொலைக்கு பழி வாங்க கணவன் - மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.