சென்னை | கோயிலில் குழந்​தையை கொஞ்சுவது போல் தங்க கொலுசு திருடியவர் கைது

சென்னை | கோயிலில் குழந்​தையை கொஞ்சுவது போல் தங்க கொலுசு திருடியவர் கைது
Updated on
1 min read

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குழந்தையை கொஞ்சுவதுபோல், தங்கக் கொலுசை திருடிவிட்டுத் தப்பிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (46). இவர் கடந்த மாதம் 13-ம் தேதி மாலை வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மனைவி மற்றும் கைக் குழந்தையுடன் மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வழிபாடு செய்துவிட்டு, கோயில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த மூதாட்டி ஒருவர், குழந்தை எனது மகனின் பிள்ளைபோல் உள்ளது எனக் கூறி தூக்கிக் கொஞ்சி விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தை காலில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கொலுசு மாயமாகி இருந்தது. அதிர்ச்சி அடைந்த மகேஷ் குமார், இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், குழந்தையின் தங்கக் கொலுசை திருடிவிட்டுத் தப்பியது சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த கலைவாணி (59) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in