வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Updated on
1 min read

சென்னை: வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முருகன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் வடபழனி முருகன் கோயிலும் ஒன்று.

இந்த கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணியளவில், எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் அழைத்து மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, வடபழனி காவல் நிலைய போலீஸார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர்.

சோதனையின் முடிவில் சந்தேகப்படும்படியான எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் வடபழனி போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர். மேலும், வடபழனி முருகன் கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in