

தென்காசி: ஆழ்வார்குறிச்சி அருகே மீன்பாசி குத்தகைதாரர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டார். போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர், அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (45). இவர் அதே பகுதியில் உள்ள குளத்தில் மீன்பாசி குத்தகைக்கு எடுத்திருந்தார். இரவு நேரத்தில் குளத்து கரையில் காவலுக்கு இருப்பது வழக்கம். அதன்படி, நேற்று இரவு காவலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலையில் அப்பகுதியில் தலையை துண்டித்து இருதயராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், உடலையும், துண்டிக்கப்பட்டு கிடந்த தலையையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
உயிரிழந்த இருதயராஜின் தந்தை அருளுக்கு 2 மனைவிகள். முதல் மனைவியின் மகனான இருதயராஜுக்கும், இரண்டாம் மனைவியின் பிள்ளைகள் ஜெயபால் (40), ஆரோக்கியசாமி (38) ஆகியோருக்கும் சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பாக இவர்களுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெயபால், ஆரோக்கியசாமி ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், சொத்து பிரச்சினை காரணமாக இருதயராஜ் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.