

கள்ளக்குறிச்சி / கடலூர்: வானூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் கலிங்கலில் விழுந்து உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கிளியனூர் பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மகள் நர்மதா, தாஸ் மகள் அனுஸ்ரீ.
இருவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் குளித்துவிட்டு, பின்னர் கலிங்கலை பார்ப்பதற்காகச் சென்றனர். அப்போது இருவரும் அதில் தவறி விழுந்தனர். கலிங்கலில் தண்ணீர் அதிகமாகச் சென்றதால் இருவரும் நீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து நர்மதாவை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அனுஸ்ரீ உடல் கிடைக்காத நிலையில், வானூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் தீவிரமாக தேடினர். பின்னர், அவரது உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பாக வானூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பு: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கள்ளிப்பாடி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சக்தி (13) என்பவர் நண்பர்களுடன் வெள்ளாற்றில் குளித்துள்ளார். திடீரென அவர் மாயமானார். நண்பர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்வில்லை.
தகவலறிந்து வந்த ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் வெள்ளாற்றில் தேடினர். ஒரு மணிநேர தேடலுக்குப் பின்னர் சக்தியின் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சக்தி, ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வந்தார்.