கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன், டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன், டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை
Updated on
1 min read

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரி அருகேயுள்ள இடுகொரையைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றனர். அப்போது, மின்தடை காரணமாக மருத்துவமனை இருளில் மூழ்கியிருந்தது. இதையடுத்து, டார்ச் லைட் மற்றும் செல்போன் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து கோத்தகிரி மக்கள் கூறும்போது, "தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கோத்தகிரியில் ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. பல லட்சம் மதிப்பில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட இந்த மருத்துவமனையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் அலட்சியம் தொடர்கிறது.

அண்மையில், நோயாளிகளின் படுக்கையில் நாய் படுத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. தற்போது சிறுமிக்கு செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, "மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக டார்ச் லைட் பயன்படுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பரப்பி உள்ளனர’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in