மருத்துவப் படிப்புகளில் சேர போலி என்ஆர்ஐ சான்றிதழ்: 44 பேருக்கு புதுச்சேரி போலீஸ் சம்மன்
புதுச்சேரி: மருத்துவப் படிப்புகளில் சேர போலி என்ஆர்ஐ சான்றிதழ் வழங்கிய 44 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு புதுச்சேரி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
புதுவையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் என்ஆர்ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) ஒதுக்கீட்டில் 116 இடங்கள் உள்ளன. இதில் முதல், 2-ம் கலந்தாய்வில் 37 மாணவர்கள் சேர்ந்தனர். அப்போது என்ஆர்ஐ ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ் அளித்து மாணவர்கள் சேர்வதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், மீதமுள்ள 79 இடங்களுக்கு 134 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த மாணவர்களின் சான்றிதழ்களை சென்டாக் நிர்வாகம் சரிபார்த்தது. இதில் 44 பேரின் என்ஆர்ஐ ஸ்பான்சர் சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாணவர்களின் சான்றிதழ்களை வெளிநாட்டு தூதரகம் அனுப்பி சென்டாக் நிர்வாகம் விசாரித்தது. இதில் 44 மாணவர்கள் போலி சான்றிதழ் வழங்கியது கண்டறியப்பட்டது. இதை வெளிநாட்டு தூதரகங்கள் உறுதி செய்தது. இது தொடர்பாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சென்டாக் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 44 மாணவர்கள் மீதும் லாஸ்பேட்டை போலீஸார் போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மை என சமர்பித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில், சிக்கிய மாணவர்கள் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபார் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கையை போலீஸார் எடுக்கவில்லை. இது பற்றி காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், "வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள 44 மாணவர்கள், பெற்றோர்களுக்கு சம்மன் அனுப்பவுள்ளோம். இந்த விசாரணையில் யார் மூலமாக போலி சான்றிதழ் பெற்றார்கள், அவர்களுக்கு புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் யார் என விசாரிப்போம்.
மாணவர்கள் நேரடியாக இந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும், பெற்றோர்கள் தான் யாரையாவது அணுகி இருக்க வேண்டும் என்ற ரீதியில் விசாரணையை துவக்கியுள்ளோம். பெற்றோர்கள் தரும் தகவல்கள் அடிப்படையில் ஏஜெண்டுகளை கைது செய்து விசாரிப்போம்" என்றனர்.
இதனிடையே முதல், 2-வது கலந்தாய்வில் என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் போலிச் சான்றிதழ்கள் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்தும் சென்டாக் நிர்வாகம் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
