மதுரை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

முத்துக்குமார் 
முத்துக்குமார் 
Updated on
1 min read

மதுரை: சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாதம்பட்டியை சேர்ந்தவர் தவசி மகன் முத்துக்குமார் (24). அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அப்பகுதியில் நாள்தோறும் விளையாடச் செல்வது வழக்கம். கடந்த 20.12.2021 அன்று காலையில் விளையாடச் சென்ற சிறுவனை நீண்ட நேரமாக காணவில்லை. இதனால் அவனது தந்தை பல்வேறு இடங்களில் தேடிச்சென்றார். அப்போது மறைவான இடம் ஒன்றில் சிறுவனுக்கு முத்துக்குமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

சிறுவனின் தந்தையை பார்த்ததும் முத்துக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்து சிறுவனை மீட்டு வந்த அவனது தந்தை உள்ளிட்டோர், நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி முத்துக்குமரவேல், “முத்துக்குமார் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்துள்ளது. இதனால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in