சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை: தொடர் கொலையால் மக்கள் அச்சம்

கொலை செய்யப்பட்டவர்
கொலை செய்யப்பட்டவர்
Updated on
1 min read

சிவகங்கை: சிவகங்கை அருகே அதிமுக நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை அருகே நாட்டார்குடியைச் சேர்ந்தவர் கணேசன் (70). அதிமுக கிளைச் செயலாளரான இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இன்று (நவ.4) அதிகாலை கடையை திறக்கச் சென்ற அவரை, ஒருவர் வெட்டிவிட்டு தப்பினார். இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் கொலை செய்த அதே நபர், முன்னதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரையும் வெட்டினார். ஆனால் அவர் தப்பியோடியதால் உயிர் தப்பினார். இதுகுறித்து சம்பவ இடத்தில் மானாமதுரை டிஎஸ்பி நிரேஷ் மற்றும் திருப்பாச்சேத்தி போலீஸார் விசாரணை நடத்தினர். சில தினங்களுக்கு முன், அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் கொலை சம்பவத்தை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த காவலர்கள் தடுத்து ஒருமையில் பேசினர். இதனால் செய்தியாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கிராம மக்களும் செய்தியாளர்களுக்கு ஆதரவாக போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிவகங்கை பகுதியில தீபாவளியில் இருந்து இதுவரை தொடர்ந்து 3 கொலைகள் நடந்ததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in