சென்னையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கொலை

சென்னையில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கொலை
Updated on
1 min read

சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறின் போது 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சங்கர் மகன் சாம்(17). இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால், தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பதற்காக, ஐஸ் அவுஸ் செல்லம்மாள் தோட்டத்துக்கு நண்பர்களுடன் சாம் சென்றுள்ளார். அங்கு, திடீரென சாம் மயங்கி கீழே விழுந்துவிட்டதாக, அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.

அங்கு சாமை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஐஸ் அவுஸ் போலீஸார், சாமின் நண்பரான தேனாம்பேட்டையை சேர்ந்த சாந்தமாறன் என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பட்டாசு வெடிப்பதில், சாமுக்கும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற முதலை கார்த்திக் இடையே தகராறு ஏற்பட்டதும், அப்போது, சாமை கார்த்திக் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கார்த்திக்கை கைது செய்யக் கோரி, சாமின் உறவினர்கள் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in