

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அன்பழகன் என்பவர் பணியில் சேர்ந்தார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளநிலையில், அவருக்கு எந்த அடிப்படையில் பணி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுந்தது.
அன்பழகனுக்கு தடையில்லாச் சான்று வழங்கிய ஊமங்கலம் காவல் நிலையத்தில், என்எல்சி அதிகாரிகள் புகார் அளித்தனர். தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அன்பழகனுக்கு வழங்கிய தடையில்லாச் சான்றிதழின் கையெழுத்து காவல் உதவி ஆய்வாளரின் கையெழுத்து இல்லை என்பது தெரியவந்தது.
கையெழுத்தை முறைகேடாக... மேலும், உதவி ஆய்வாளரின் கையெழுத்தை தலைமைக் காவலர் சுதாகர் முறைகேடாகப் பயன்படுத்தியதும், அதே காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரியும் ஜோசப் பிரபாகரன் என்பவரும் வேறொரு நபருக்கு எஸ்.ஐ. கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இந்த முறைகேடுகளை காவல்நிலைய தனிப்பிரிவு காவலர் சங்குபாலன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவிட்டார். மேலும், தலைமைக் காவலர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.