

சென்னை: விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தியாகராய நகர் துணை ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸார் வாடிக்கையாளர் போல பேசி அந்த இடத்துக்குச் சென்றனர். அப்போது வாடிக்கையாளர்கள் போல பேசி கோவூரை சேர்ந்த யோகா மாஸ்டர் ராஜேஷ் குமார் (27), தனியார் வங்கியில் பணியாற்றும் சாலிகிராமத்தைச் சேர்ந்த சாய் பாலாஜி (26) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள மெத்தம் பெட்டமைன், 13 ஊசிகள், 6 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். ராஜேஷ் என்பவர் பெங்களூருவில் இருந்து நண்பர் அருண் மூலமாக ஒரு கிராம் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருளை 4 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்து ஆப் ஒன்றின் மூலம் அதை தனக்கு நன்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் சென்னையில் பல இடங்களில் அதிக விலைக்கு விற்றுவந்துள்ளார்.
இந்நிலையில் அந்த ஆப் மூலம் அறிமுகமான சாய் பாலாஜியை முதலில் பிடித்து, அவரது பேக்கில் இருந்து 1- கிராம் மெத்தம் பெட்டமைன் போதைப் பொருளை கைபற்றியதாகவும் பின்னர் அவரை செல்போனில் பேச வைத்து ராஜேஷை வரவழைத்து அவரையும் கைது செய்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பலின் சங்கிலி தொடர் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.