தென்காசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: போலீஸார் விசாரணை

தென்காசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: போலீஸார் விசாரணை
Updated on
1 min read

தென்காசி: தென்காசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருகே உள்ள கம்பிளி பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன் (70). இவரது மனைவி சுடலைமாடத்தி (65). இவர்கள், ஊருக்கு அருகே உள்ள தங்களது தோட்டத்தில் தங்கியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர். இவர்களது மகன் முருகேசன் (50). இவர், தனது மனைவி, மகன் குடும்பத்தினருடன் கம்பிளியில் வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் முருகேசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கண் பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (செப்.27) முருகேசன் தனது மருமகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் திருநெல்வேலிக்கு சென்று கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதாகவும், குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக்கொள்ளும்படியும் கூறியுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மகன் சிவா, தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, தொலைபேசி அழைப்பை முருகேசன் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சிவா, தனது தாத்தாவின் தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மாட்டு தொழுவத்தில் பரமசிவன், சுடலைமாடத்தி ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டுக்குள் முருகேசன் சடலமாக கிடந்துள்ளார். அருகில் விஷ மருந்து கிடந்துள்ளது.இதுகுறித்து தகவல் அறிந்த ஆய்க்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 3 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், அவர்கள் மரணத்துக்கான காரணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in