

சென்னை: போலி பத்திரப்பதிவு விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பத்திரப்பதிவுத் துறை டிஐஜி ரவீந்திரநாத், சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சேலம் - மதுரை சரக பத்திரப்பதிவு துறை டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத்(56). இவர் சென்னையில் பத்திரப்பதிவு துறை பதிவாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெருங்களத்தூரில் சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் போலிஆவணம் மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்துள்ளார்.அந்த நிலத்தின் உரிமையாளர் கலைவாணி என்பவரது பெயரில் இருந்த உண்மையான பத்திரத்தை திருடி, அதை நகல் எடுத்து அதன்மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாகவும், அதற்கு உடந்தையாக ரவீந்திரநாத் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த போலி பத்திர விவகாரம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கலைவாணி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரே வரிசை எண் கொண்ட 2 பத்திரங்கள் எப்படி இருக்க முடியும்? இதற்கு பத்திரப்பதிவுத் துறையினர் உடந்தையா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி,இதுகுறித்து விசாரிக்க சிபிசிஐடிபோலீஸாருக்கு பரிந்துரைத்தது.
இதையடுத்து சிபிசிஐடி பிரிவு போலீஸார் சார் பதிவாளரின் பெண் உதவியாளர் உட்பட 5 பேரை அடுத்தடுத்து கைதுசெய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர். பெண் உதவியாளர் பணியிடை நீக்கத்தில் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சேலம் விரைந்த சென்னை சிபிசிஐடி பிரிவு தனிப்படை போலீஸார், அங்கு ரவீந்திரநாத்தை சுற்றிவளைத்து, அவரை சென்னை அழைத்து வந்தனர். பின்னர், எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், இந்த வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை, தினமும் நூற்றுக்கணக்கான கோப்புகளை பார்ப்பதாகவும், அதன
டிப்படையில் குறிப்பிட்ட நிலப்பத்திரம் தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டதாகவும், இதற்காக ஆதாயம் பெறவில்லை எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், கையெழுத்து போடுவதற்கு முன்பு பைல்களின் உண்மை தன்மை அறிந்து கையெழுத்திட வேண்டும் என கூறியபோலீஸார், பத்திரப்பதிவு மோசடி விவகாரம் தொடர்பாக ரவீந்திரநாத்தை கைது செய்தனர். பின்னர், இரவோடு இரவாக அவரை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
டிஐஜி அந்தஸ்தில் உள்ள ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிசிஐடி போலீஸார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.