சென்னை மண்ணடியில் வியாபாரியை கத்தியால் தாக்கி ரூ.50 லட்சம் வழிப்பறி

சென்னை மண்ணடியில் வியாபாரியை கத்தியால் தாக்கி ரூ.50 லட்சம் வழிப்பறி
Updated on
1 min read

சென்னை: சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ்கான் (65). இவர், பூக்கடை ஈவினிங் பஜாரில் உள்ள உறவினர் கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் கடையிலிருந்து ரூ.50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

மண்ணடி லிங்கு செட்டி தெரு சந்திப்பு அருகே சென்றபோது, பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் நவாஸ்கானை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்த ரூ.50 லட்சம் ரூபாயை கத்தி முனையில் பறித்து சென்றுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த நவாஸ்கான் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதை சுற்றி பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், நவாஸ்கான் கொண்டு சென்றது கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in