சென்னை: போரூர் சுங்கச்சாவடி அருகே ரேஸ் பைக் மோதி காவலர் உயிரிழப்பு

உயிரிழந்த போலீஸ்காரர் குமரன்
உயிரிழந்த போலீஸ்காரர் குமரன்
Updated on
1 min read

திருவள்ளூர்: சென்னை, போரூர் சுங்கச்சாவடி அருகே ரேஸ் பைக் மோதி, ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் உயிரிழந்த சம்பவம், போலீஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). இவரது மனைவி விஜயலட்சுமி அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். குமரன் - விஜயலட்சுமி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள எஸ்ஆர்எம்.(போரூர்) போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரிந்து வந்த குமரன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சட்டம்- ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, அவர், எஸ்.ஆர்.எம்.சி (போரூர்) காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், குமரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் இரும்புலியூர்- புழல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து, புழல் பகுதியை நோக்கி, ரேஸ் பைக்கில் அதிவேகமாக வந்த குமரன் மீது வேகமாக மோதியது. இதில், குமரனும், ரேஸ் பைக்கை ஓட்டி வந்தவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில், படுகாயமடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரேஸ் பைக் ஓட்டிய நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், உயிரிழந்த போலீஸ்காரர் குமரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், ரேஸ் பைக் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in