திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கணவர் மீது ரூ.50 கோடி நில மோசடி வழக்குப் பதிவு

திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி கணவர் பொன்னுசாமி
திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.சரஸ்வதி கணவர் பொன்னுசாமி
Updated on
1 min read

நாமக்கல்: ரூ.50 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து அபகரித்ததாக எழுந்த புகாரில், திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதியின் கணவர் மீது நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ராஜீவ் நகரை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பொன்னுசாமி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நாமக்கல் அடுத்த சிலுவம் பட்டியைச் சேர்ந்த எட்டிக்கண் (72) என்பவருக்கு சொந்தமான 5.62 ஏக்கர் நிலத்தை கடந்த 2006ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து வாங்கியதாக புகார் எழுந்தது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என கூறப்படுகிறது.

இந்த நிலத்தில் 7,200 சதுர அடியை தனது கார் ஓட்டுநருக்கு பொன்னுசாமி விற்பனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, எட்டிக்கண் தனது நிலத்தை போலி ஆவணம் தயார் செய்து கிரையம் செய்த பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீஸார் நேற்று இரவு பொன்னுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் கணவரின் மீது போலீஸார் வழக்கு செய்திருப்பது நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in