தருமபுரியில் ஓட்டல் மாஸ்டர் கொலை - கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை

உள்படம்: ஓட்டல் மாஸ்டர் முகமது ஆசிக்
உள்படம்: ஓட்டல் மாஸ்டர் முகமது ஆசிக்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரியில் இளைஞரை கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

தருமபுரி அடுத்த வி.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆசிக் (25). இவர், தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரியாணி ஓட்டல் ஒன்றில் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு அவர் பணியில் இருந்தபோது அந்த ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அவர்கள், கிரில் மாஸ்டர் முகமது ஆசிக்கிடம் பேச்சுக் கொடுத்தபடி திடீரென அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதையறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸார் ஆசிக்கின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பதும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிக்கை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in