படகு மூலம் இலங்கை செல்ல முயன்றதாக பெண் உட்பட 3 பேர் கைது

படகு மூலம் இலங்கை செல்ல முயன்றதாக பெண் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் இலங்கை செல்ல முயன்றதாக பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சிங்கம் மனைவி விஜிதா(45). இவர் நேற்று ராமேசுவரம் துறைமுகம் வீதி பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார்.

போலீஸார் அவரை ராமேசுவரம் துறைமுகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விசாரித்தனர். இவர் 2013-ம் ஆண்டு விமானம் மூலம் தமிழகம் வந்து, விசா முடிந்த பின்னரும் இலங்கை செல்லாமல், உறவினர் வீட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், ராமேசுவரத்திலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை செல்ல முடிவு செய்த அவர், முகவர்களாகச் செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சேசு, அருளானந்தம், சத்திய எவிசின் ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, விஜிதா, அருளானந்தம், சத்திய எவிசியின் ஆகியோரை ராமேசுவரம் துறைமுகம் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான சேசு என்பவரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in