பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி விடுதியில் பணம் பறிக்க முயன்ற ஆயுதப்படை காவலர் கைது @ சென்னை

பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி விடுதியில் பணம் பறிக்க முயன்ற ஆயுதப்படை காவலர் கைது @ சென்னை
Updated on
1 min read

சென்னை: பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸ் எனக் கூறி சொகுசு விடுதியில் சோதனை நடத்தி பணம் பறிக்க முயன்றதாக ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடபழனி 100 அடி சாலையில் தங்கும் விடுதியுடன் தனியார் சொகுசு ஓட்டல் ஒன்று உள்ளது. கடந்த மாதம் 31-ம் தேதி, அந்த ஓட்டலுக்கு சென்ற மர்ம நபர், தன்னை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி எனக் கூறியுள்ளார். மேலும், இந்த ஓட்டலில் பாலியல் தொழில் நடைபெறுவதாக புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் இங்கு சோதனை நடத்த வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடவடிக்கையில் சந்தேகம்: அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஓட்டல் மேலாளர், இதுகுறித்து வடபழனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த அந்த நபர் அங்கிருந்து நழுவினார்.

போலீஸாரின் தொடர் விசாரணையில், ஓட்டலில் போலீஸ் அதிகாரி எனக்கூறி சோதனை நடத்த வந்தவர் திருவான்மியூரில் வசிக்கும் ஆயுதப்படை காவலர் பவஷா (26) என்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பின், வடபழனி போலீஸார் சம்பந்தப்பட்ட ஆயுதப்படை காவலர் மீது கடந்த 14-ம் தேதி 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, திருச்சியில் பதுங்கியிருந்த பவஷாவை வடபழனி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சியைச் சேர்ந்த இவர் திருவான்மியூரில் தங்கி, சென்னை ஆயுதப்படை காவலராகப் பணிசெய்து வந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு திருவான்மியூரில் உள்ள ஸ்பாவுக்கு சென்று, காவல் துணை ஆணையரின் தனிப்படை காவலர் எனக் கூறி ரூ.5 ஆயிரம் பெற்றபோது சிக்கியதும் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in