பாஜக பெண் நிர்வாகி கணவர் கொலை வழக்கு: நொளம்பூர் காவல் நிலையத்தில் 6 பேர் சரண்

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Updated on
1 min read

சென்னை: பாஜக பெண் நிர்வாகியின் கணவரை ஓட ஓட வெட்டிய சம்பவத்தில் 6 பேர் நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) சரணடைந்துள்ளனர்.

பாஜகவின் மகளிரணி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நதியா. இவரது கணவர் சீனிவாசன்.‌ இவர்கள் சென்னை அண்ணாநகர் தங்கம் காலனி பகுதியில் வசித்து வருகின்றனர்.நேற்று மதியம் சீனிவாசன் சென்னை திருமங்கலம் கார்டன் 6- வது அவென்யூ பகுதியில் உள்ள தேவாலயம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் சீனிவாசனை வழிமறித்து வெட்டி விட்டு தப்பிவிட்டது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்து வந்த திருமங்கலம் போலீஸார் பலத்த காயமடைந்த சீனிவாசனை மீட்டு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது, அவர் மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த நாய் பாபு என்பவருக்கும், சீனிவாசனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், இதன் காரணமாக, இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பிரபல ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி என கூறப்படும் வெள்ளை ராஜேஷ், நாய் பாபு மற்றும் சிலர் தான் சீனிவாசனை வெட்டியதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நொளம்பூர் காவல் நிலையத்தில் பிரசாந்த், பிரகாஷ், சீனிவாசன் , சரவணன், ராஜேஷ், கணேசன் ஆகிய 6 பேர் இன்று சரணடைந்துள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு சவுக்கார்பேட்டையில் நெடுஞ்செழியன் என்ற நபரை கொலை செய்த வழக்கில் சீனிவாசன் மற்றும் அவரது மாமனார் ராஜேந்திரன் ஆகியோர் கைதாகி பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்தவர்களில் பிரசாந்த் என்பவர் நெடுஞ்செழியனின் நெருங்கிய உறவினர். எனவே, ரவுடி கும்பல் மூலம் 19 ஆண்டு பகைக்கு பழித்தீர்த்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். விசாரணை முழுமையாக முடிந்த பிறகே, முழு விவரம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in