

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பமந்து கால்வாயில் விழுந்த வட மாநில இளைஞர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை பின்புறம் கோடப்பமந்து கால்வாய் ஓடுகிறது. இன்று மதியம் வட மாநில இளைஞர் ஒருவர் திடீரென இந்தக் கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கால்வாயில் குதித்த அவர் சகதியில் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அப்பகுதியில் மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சகதிக்குள் சிக்கிக்கொண்ட அவரை மீட்க யாரும் முன்வராத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கார்த்தி என்பவர் தனி ஆளாக கால்வாயில் இறங்கி அந்த இளைஞரை மீட்டார்.
ஆனால், அதற்குள்ளாக அந்த இளைஞரின் உயிர் பிரிந்திருந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் வட மாநில இளைஞர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த வட மாநில இளைஞர் குறித்த விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.