டி.டி.எஃப்.வாசன் செல்போனை போலீஸிடம் ஒப்படைக்க இரு நாட்கள் கால அவகாசம்

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்
Updated on
1 min read

மதுரை: யூடியூபரான டிடிஎஃப் வாசன் மொபைல் போனை ஒப்படைப்பதற்கு இரு நாட்கள் கால அவகாசம் வழங்கி காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர் சாலை விதிமீறல்களால் இருசக்கர லைசென்ஸ் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பின்னர், ஓட்டுநர் கற்றல் உரிமம் (LLR) மூலம் கார் ஓட்டி வந்தார் டி.டி.எஃப்.வாசன். கடந்த மே 15 அன்று சென்னையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே செல்போன் பேசியபடி வேகமாக, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கார் ஓட்டியதாக அண்ணாநகர் காவல் துறையால் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மே 29 அன்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, காவல் நிலையத்தில் 10 நாட்கள் கையெழுத்திட வேண்டும், இனி இதுபோல் குற்ற சம்பவங்களில் ஈடுபட கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கியது மாவட்ட நீதிமன்றம். காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் வாசன் தனது மொபைல் மற்றும் ஆவணங்களுடன் விசாரணைக்காக இன்று (ஜூன் 3) காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அண்ணாநகர் போலீஸார் சம்மன் அனுப்பினார்கள்.

இந்நிலையில், இன்று காலை காவல் நிலையத்தில் ஆஜரான வாசன் தனது மொபைல் மற்றும் ஆவணங்கள் சென்னையில் உள்ளதால், அவற்றை ஒப்படைக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். அதனை ஏற்ற காவல் துறையினர், புதன்கிழமையன்று ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in