வாட்ஸ்அப் மோசடி குழுவில் இணைந்து ரூ.9 கோடியை இழந்த தொழிலதிபர்
நொய்டா: டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த தொழிலதிபர் ரஜத் போத்ரா (40). இவர் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பான ஒரு வாட்ஸ்அப் குழுவில் கடந்த மே 1-ம் தேதி இணைந்துள்ளார். அந்தக் குழுவில் பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதிப்பது குறித்த தகவல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறிய அளவு தொகையை முதலீடு செய்து வந்துள்ளார். இதற்கு லாபமும் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மே 27-ம் தேதி அவர் ரூ.9.09 கோடியை முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு அவருடைய வங்கிக் கணக்கு மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 31-ம் தேதி புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலைய துணை ஆணையர் விவேக் ரஞ்சன் ராய் நேற்று கூறும்போது, “ரஜத் போத்ரா புகார் கொடுத்த உடனே புலனாய்வில் ஈடுபட்டோம். இதுவரை அவர் பரிமாற்றம் செய்த தொகையில் ரூ.1.62 கோடியை மீட்டுள்ளோம். மேலும் இவருடைய கணக்கில் இருந்த தொகை சென்னை, அசாம், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மோசடி கும்பலை கைது செய்வதற்காக சிறப்புக் குழுவை அமைத்துள்ளோம். மோசடியில் சிக்கிக் கொண்டால் உடனடியாக 1930 அல்லது 112 என்ற உதவி எண்களில் புகார் செய்ய வேண்டும். அல்லது இணையவழி குற்றப் பிரிவில் புகார் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
