ஆவடி | பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் ஆசை காட்டி மொபைல் செயலி மூலம் ரூ.7.50 கோடி மோசடி

பிரேமாராம்
பிரேமாராம்
Updated on
1 min read

ஆவடி: காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனோரஞ்சன்குமார் (35). சுங்கத் துறை ஊழியரான இவருக்கு கடந்த ஆண்டு டிச. 4-ம்தேதி சமூக வலைதளம் மூலம் அதிதீ என்பவர் அறிமுகமானார். அவர் பங்குச் சந்தையில் முதலீடுசெய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, ஒரு வாட்ஸ்-அப் குழுவில் மனோரஞ்சன் குமாரை சேர்த்து, அதில் ஒருமொபைல் செயலி லிங்கை அனுப்பி, அதை பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மனோரஞ்சன்குமார், அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் 7 ஆயிரம் பங்குகளை வாங்கி லாபம் அடைந்துள்ளார்.

தொடர்ந்து, அதே செயலி மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 13 -ம் தேதி முதல் கடந்த ஜனவரி 8-ம் தேதி வரை பல நிறுவனங்களின் பங்குகளில் ரூ.38,88,164 -யைமனோரஞ்சன்குமார் முதலீடு செய்துள்ளார். பிறகு, அச்செயலிமுடக்கப்பட்டுள்ளது. இதனால்,தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

காவல் ஆணையர் சங்கரின் உத்தரவின் பேரில் ஆவடி சைபர்க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவ்விசாரணையில், குஜராத்மாநிலம், ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேமாராம் (43), தன்நண்பர்களுடன் சேர்ந்து போலி மொபைல் செயலி உருவாக்கி, இந்தியா முழுவதும் மனோரஞ்சன்குமார் உள்ளிட்ட 44 பேரிடம் சுமார் ரூ.7.50 கோடிவரை மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆவடி சைபர் க்ரைம் போலீஸார் குஜராத் மாநிலம் சென்று, பிரேமாராமை கைது செய்தனர். பிறகு, அவரைஆவடி அழைத்து வந்து நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in