மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு

மதுரை அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருட்டு
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் 200 பவுனுக்கு மேல் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்ட நிலையில், கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம், மீனாட்சிநகர் பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா (42). காவல் ஆய்வாளர். கணவர் உதய கண்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஷர்மிளா தற்பொழுது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சப்டிவிஷன் விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு ஷர்மிளா வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளிருந்த பீரோவில் இருந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக சம்பவம் குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் காவல் ஆய்வாளர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுமார் 200 பவுனுக்கு மேல் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், கைரேகை நிபுணர்கள் ஏ.டி.எஸ்.பி முருகானந்தம்,டி.எஸ்.பி கிருஷ்ணன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். காவல் ஆய்வாளரின் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in