Published : 11 May 2024 06:01 AM
Last Updated : 11 May 2024 06:01 AM

கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு கார்களில் குட்கா கடத்திய 3 பேர் கைது: 764 கிலோ குட்கா, ரூ.5 லட்சம், 3 கார் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து சென்னைக்கு கார்களில் குட்காகடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

சென்னை: கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னைக்கு கார்களில் குட்கா கடத்தி வந்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 764கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்குரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடத்தல் கும்பலைப் பிடிக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையபோலீஸாரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.

அண்ணாசாலை காவல் நிலைய போலீஸார் நேற்று முன்தினம் மாலை ராயப்பேட்டை, மணிக்கூண்டு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 3 கார்களை அடுத்தடுத்து நிறுத்திவிசாரணை செய்தபோது, அதிலிருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.

சந்தேகத்தின் பேரில், கார்களில் வைத்திருந்த பார்சல்களை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டதாக திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் (27), ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த மதுசூதன் ஜான்கிட் (25), சென்னை அடுத்த கீழகோட்டையூரைச் சேர்ந்த ராஜேந்திர பாரிக்கர் (29) ஆகிய 3 பேரைக் கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்து 764 கிலோ எடைகொண்ட குட்கா, ரூ.5லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x